வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக 2 நிமிடங்களில் அனுப்பப்படும் என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 
கோபியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும். மாணவர்கள் பதிவு செய்துள்ள பெற்றோரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் 2 நிமிடங்களில் அனுப்பப்படும். இணையத்திலும் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல் படிப்புக்குச் செல்ல வாழ்த்துகிறேன். தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பாட மாற்றத்தைப் புரிந்துகொள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்தப் பயிற்சி ஒரு வார காலத்துக்கு அளிக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதியே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். 15 நாள்களுக்குள் புதிய வண்ணச் சீருடை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். 8-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு சிறிய மடிக்கணினியும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியும் ஜூன் 30 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும். நீட் தேர்வுக்கு 5 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. நீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். கோடை விடுமுறையில் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கேற்ப தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள உத்தரவை ஏற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்விக்காக தனியாக தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும். நூலகங்களை புதிதாகத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரிலுள்ள நூலகங்களில் ஐஏஎஸ் அகாதெமி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here