தமிழகத்தில் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ரமணி தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதில்லை. இந்தப் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. அதே போன்று பள்ளிகளிலும் உரிய கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. காற்றோட்டமான சூழல் கொண்டதாகவும் பள்ளிகள் இருப்பதில்லை. எனவே இதுபோன்ற பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மே மாதம் 24-ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அங்கீகாரம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வரும் 903 பள்ளிகளுக்கு எதிராக அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையைத் தொடங்கி உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here