எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நிகழாண்டில் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ 
தெரிவித்திருந்தார்.  ஆனால் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதை மறுக்கும் வகையில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு மட்டும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும்.  கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படமாட்டாது  என்று  கூறினார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, நிகழாண்டில் ஆன்லைன் மூலம் எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதை அமைச்சர் மறுத்துள்ள நிலையில், எம்பிபிஎஸ் கலந்தாய்வு எவ்வாறு நடத்தப்படும் என்பது தொடர்பான தெளிவான விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  பெருந்துறையில் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளன.
கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியையும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ள இடங்கள் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிய கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மொத்தம் உள்ள 3,350 இடங்களுக்கான கலந்தாய்வை நிகழாண்டில் நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
 



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here