வளரிளம் பருவமான 16 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு கல்வியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உளவியல் ரீதியாக அவர்களை மதிப்பீடு செய்ய சிறப்புப் பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தில் உள்ள பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 3 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம் 3 ஆசிரியர்களையும் விடுதலை செய்து கடந்த 2005-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸார் தரப்பில் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் சமூகத்துக்கு தவறான வழிகளில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும், கடமையும் உள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டே ஆசிரியர்கள் சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடையும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் போது அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பொறுப்பாளியாக்கக் கூடாது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுப்பது உள்ளிட்ட சிறு, சிறு காரணங்களுக்காக மனமுடைந்து போகும் மாணவர்கள் தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். 
தற்போதுள்ள கல்வி முறையும் மாணவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனவே, தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், கல்லூரி கல்வித்துறைச் செயலாளர் ஆகியோர் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு கல்வியால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க உளவியல் ரீதியாக அவர்களை மதிப்பீடு செய்ய சிறப்புப் பாடத்திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதே போன்று தற்கொலை எண்ணங்களை கைவிட உளவியல் ரீதியாக அவர்களுக்கு பயிற்சி அளிக்க மனநல ஆலோசகர்களை நியமித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here