பள்ளிப் படிப்பை முடித்த பலரும் கனவுப் படிப்பாக நினைப்பது மருத்துவப் படிப்பைத்தான். மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக உழைத்த மாணவர்களுக்கு, நேற்றைய தினம் பரபரப்பாக அமைந்தது. காரணம், நீட் தேர்வு முடிவு வெளியானதுதான். 2019 - 2020 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வை National Testing Agency நடத்தியது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். ஆனால் 7,00,097 மாணவர்கள் மட்டுமே அதில் தேர்ச்சிபெற்றனர். தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி, 685 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் 57வது இடத்தையும் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஆண்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த கே.கே.கார்வண்ணபிரபு 572 மதிப்பெண்ணுடன் 5-வது இடத்தைப் பெற்றார்.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவக் கல்விக்குரிய நுழைவுத் தேர்வான, `நீட் தேர்வு' நடத்தப்படுகிறது. பல தனியார் கோச்சிங் சென்டர்கள், அரசு சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் என, நீட் தேர்வு எழுத பல வழிகளிலும் மாணவ-மாணவியர் தயாராகினர். கடந்த இரண்டு ஆண்டுகளைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகப்படியான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரில் ஒருவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவரில்லை.

இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லியில் தேர்வு எழுதியவர்களில் 73.92 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக நாகாலாந்தில் தேர்வு எழுதியவர்களில் 34.52 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் 1,23,078 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 48.57 சதவிகிதத்தினர் தேர்வாகியுள்ளனர். இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த 63,789 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.



எஸ்.சி பிரிவில் 20,009 பேரும், எஸ்.டி பிரிவில் 8,455 பேரும், மற்றவர்கள் 7,04,335 பேரும் தேர்வாகியுள்ளனர். அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், மொத்தம் 454 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்த ஆண்டு ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு `கட்- ஆஃப்' மதிப்பெண் என்பதற்கான விவரங்கள்.

ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி பிரிவில் மருத்துவச் சீட்டு பெறுவதற்கு 107 மதிப்பெண் `கட்- ஆஃப்' ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு 134 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில்
ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 107 மதிப்பெண் `கட்- ஆஃப்' ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு (மாற்றுத்திறனாளிகள்) 120 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



சென்ற ஆண்டு நடந்த நீட் தேர்வில், ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 96 மதிப்பெண் `கட்- ஆஃப்' ஆக நிர்ணயிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு 119 மதிப்பெண் கட்- ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல, மாற்றுத்திறனாளிகளில் ஓ.பி.சி/எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு 96 மதிப்பெண் `கட்- ஆஃப்' மதிப்பெண்ணாகவும் மற்றவர்களுக்கு 107 மதிப்பெண்ணாகவும் நிர்ணயிக்கப்பட்டது. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் சதவிகிதத்தைப்போலவே, கட்- ஆஃப் மதிப்பெண்ணும் அதிகரித்துள்ளது.



தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவக் கலந்தாய்வுக்கான இடம் 4,110.
அதில் அரசுக் கல்லூரிகளில் 3,250 இடங்கள் உள்ளன.
தனியார் கல்லூரிகளில் 1,590 இடங்களும் உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள 1,590 இடங்களில், 860 அரசாங்கச் சீட்கள், 730 மேனேஜ்மென்ட் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த மொத்த சீட்களில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு, 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு உள்ளது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here