சென்னை: 'இரு சக்கர வாகனம் ஓட்டுவோரும், பின்னால் அமர்ந்திருப்போரும், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இல்லையெனில், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்' என, சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில், இரு சக்கர வாகனம் ஓட்டுவோரும், பின்னால் அமர்வோரும், ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை, 2015 ஜூலை, 1ல் அமலுக்கு வந்தது. இதை, 75 சதவீதம் பேர் கடைப்பிடிப்பது இல்லை; உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.வழக்கு:'ஹெல்மெட் கட்டாயம் என்பதை, போலீசார், 100 சதவீதம் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், ஹெல்மெட் விவகாரம் தொடர்பாக, கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.இதையடுத்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

ஹெல்மெட் அணியாதோரிடம், அபராதமாக, 100 ரூபாய் வசூலித்தனர்.இனி, 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, எச்சரித்துள்ளனர். இந்த நடைமுறை, விரைவில் அமலுக்குவர உள்ளது.இது குறித்து, சென்னை போக்குவரத்து போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், சாலை விபத்துகளில், 90 சதவீத இளைஞர்கள், தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணியும் சிலரும், தாடை பகுதியில், இணைப்பு பெல்ட் அணிவதில்லை.வதந்தி:குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போதும், மார்க்கெட்டிற்கு செல்லும் போதும், ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக, வாகன ஓட்டிகளிடம் வதந்தி பரவுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள், எங்கு, எவ்வளவு துாரம் சென்றாலும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

அதேபோல, பின்னால் அமர்வோரும் அணிய வேண்டும். குழந்தைகளுக்கு, ஹெல்மெட் அணிவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். விபத்து எங்கே, எப்போது நடக்கும் என, யாருக்கும் தெரியாது. 10 அடி துாரத்தில் விபத்து நடந்து விடும்.சட்ட திருத்தம்:வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் மீது, எத்தனை முறை வழக்குகள் பதிந்தாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொது மக்கள், தங்கள் கடமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

தற்போது, லோக்சபாவில், மோட்டார் வாகன சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோரிடம், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் இருந்து புறப்படும் போது, மொபைல் போனை எடுக்க மறக்காதது போல, உயிர் காக்கும் ஹெல்மெட்டை, வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்வோர் அணிவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது