உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி சிறப்பாசிரியர்களாக தகுதியானவர்களாகக் கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2017-இல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 632 பேரின் பெயர் பட்டியல் வெளியானது. இந்த தேர்வில் பலருக்கு கல்வித்தகுதி இல்லை எனக் கூறி நிராகரிக்கப்பட்டனர்.
இதனை எதிர்த்து, திருநெல்வேலியைச் சேர்ந்த மலர்விழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தேர்வுப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த செல்வம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர்  ஆகியோர் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:
உடற்கல்வி சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்களையும் தகுதியானவர்களாக கருதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து இவர்களுக்கும் பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.