பொங்கலுக்கு மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று செய்திகள் வெளியான நிலையில் மாணவர்கள் வர தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மாணவர்களுக்காக பேசும் நிகழ்ச்சி ஒன்று ஜனவரி 16 அன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கலான 16ம் தேதி பள்ளிகளுக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் 'பிரதமர் மோடி பேசுவதை கேட்க மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை
வீட்டில் இருந்தபடியே கேட்கலாம். பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறையில் பள்ளிக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அமைச்சரின் விளக்கம் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.