அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது

வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், புத்தாண்டை சமயத்தில் சார்பு பணியாளர்கள், தங்கள் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகும் தற்போது வரை இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்து தான் இதுபோல பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள்,'என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்கள் வாங்குவோருக்கும், வழங்குபவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, இந்த சட்டவிரோத நடைமுறையை தடுக்க கோரி அரசுக்கு மனு அனுப்பியதாகவும், அதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அளித்த பதிலில், எந்த துறை என்பதை குறிப்பிட்டுத் தெரிவிக்கும்படி கூறியிருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் பரிசுப் பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதே போல அரசு ஊழியர்கள், தாங்களோ, தங்கள் குடும்பத்தினர் மூலமோ பரிசுப் பொருட்களை பெறக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியை அமல்படுத்தும்படி, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Join Telegram& Whats App Group Link -Click Here