உலகின் பல நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸானது பரவி வருகிறது. மத்திய அரசானது இந்த வைரஸ் தொற்றைப் பேரிடராக அறிவித்துள்ளது. பல மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசும் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ..


தமிழக அரசு
* தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

* அண்டை மாநிலங்களிலிருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்புச் சோதனை சாவடிகளில், நோய்க் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

* தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்குத் தனியார் பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையையொட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.

* தனியார் மற்றும் அரசுப்பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கோரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.

* ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்தம் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.


பேருந்து நிலையம்
* தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொது மக்களை அனுமதிக்க வேண்டாம் என சட்டப் பேரவைத் தலைவருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொது மக்கள் தவிர்க்கவும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் (10 முதல் 12ஆம் வகுப்பு வரை) மற்றும் கல்லூரித் தேர்வுகள் - செய்முறைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.

*அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாள்களுக்கான உணவுப் பொருள்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.

* மாநிலத்தில் செயல்படும் அனைத்துத் திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள் , உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.

* திருமண மண்டபங்களில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவிலேயே மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.

* அதிகமாகக் கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக் காலப் பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், போன்ற நிகழ்வுகளை நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்கக் கூடாது. விளையாட்டு அரங்குகள், பார்கள், கிளப்புகள் ஆகியவையும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.


கல்வி நிலையம்
* கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொது மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாகக் கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் 31.3.2020 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொது மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணியர் தங்குமிடம் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலாப் பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் 31.3.2020 வரை செய்யக் கூடாது.

* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்விடங்களில், நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தெர்மல் ஸ்கேனர் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறையும், சுகாதாரத் துறையும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

* அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாகக் கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

* அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையாளர்கள், மாவட்டப் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பிறப்பிக்கப்பட்ட மேற்கண்ட உத்தரவுகள் மற்றும் நடைமுறைகளைச் சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி, கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* பொது மக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்குத் தவிர்க்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

* பொது மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினைப் பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம் எனவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாள்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்யவும்.


கொரோனா
* அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்குச் செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நோய்க்கான அறிகுறி உள்ள பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

* யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிப் பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியைச் செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.

* கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்துகொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477. மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் நாளை (17.3.2020) முதல் நடைமுறைக்கு வரும்.

கொரோனா வைரஸிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க தமிழக அரசு அறிவித்துள்ள மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Join Telegram& Whats App Group Link -Click Here