பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் பொதுத்தேர்வுகள் முடிவடைய உள்ளன. இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்புக்கு மார்ச் 27-ல் தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்கள் நலன் கருதி பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்தன. தொற்று பரவல் தீவிரமானால் பத்தாம் வகுப்புக்கு மட்டுமாவது பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. பாமக நிறுவனர் ராமதாஸும் இதனை வலியுறுத்தி இருந்தார்.

இதனால் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய சூழலில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும். தேர்வு மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனினும் வரும் நாட்களில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join Telegram& Whats App Group Link -Click Here