அன்னவாசல்,செப்.25: தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த தனது இருகுழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்த  அரசுப் பள்ளி ஆசிரியரை அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் செங்குட்டுவன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை, இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. காலணி முதல் சீருடை, பாடப்புத்தகங்கள், மதிய உணவு, கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, மடிக்கணினி வரை அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இருப்பினும், ஆங்கிலக்கல்வி மோகத்தால் கூலித் தொழிலாளர்கள் முதல் அரசு உயரதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரும், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காமல்,  அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால்தான், கல்வித்தரம் மேலும் உயரும் என பரவலாக கல்வியாளர்கள் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.
நீண்ட நாள்களாக நீடித்து வரும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி கற்பிப்பதை மெய்பிக்கும் வகையிலும், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரிய- ஆசிரியைகள், தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அன்னவாசல்  அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இரா.செல்வமகேஸ்வரி  என்பவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த தனது இருகுழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை பெற்று வந்துள்ளார். பின்னர் அவரது மூத்த மகள் பி.சிவதேஜஷ்வினியை  அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பிலும்,தனது இளைய மகன் பி.தன்வந்த்ரிஷியை அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பிலும் சேர்த்துள்ளார்.

இத்தகவல் அறிந்த அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் செங்குட்டுவன் அவர்கள் ஆசிரியை இரா.செல்வமகேஸ்வரி மற்றும் அவரது கணவன் பா.பிரபாகரன் ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.நிகழ்வின் பொழுது அன்னவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ்,அன்னவாசல் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது இரு குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்த இரா.செல்வமகேஸ்வரி கூறியதாவது: நான் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக சென்ற ஆண்டு 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாறுதல் பெற்று வந்தேன்.எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உண்டு.இந்த ஆண்டு தான் அன்னவாசல் கோல்டன் நகரில் குடியேறினோம்.எனவே எனது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க விரும்பி ஊர்மக்களிடம் விசாரித்த பொழுது அன்னவாசல்  அரசு ஆரம்பபள்ளியை பற்றி மிகச்சிறப்பாகவும் பெருமையாகவும் கூறினார்கள்.உடனே நானும் எனது கணவரும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும்,ஆசிரியப் பெருமக்களையும் நேரில் சந்தித்து பேசினோம்.எங்களுக்கு அப்பள்ளியின் மேலும் ஆசிரியர்கள் மேலும் நம்பிக்கை வந்தது.உடனே தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த எனது மகனை அன்னவாசல்  தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்த்தோம்.எனது மகளை நான் பணிபுரியும் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துள்ளேன்.தற்பொழுழு அர்ப்பணிப்பு உணர்வோடு  செயல்படும் ஆசிரியர்கள் உள்ள  அரசுப்பள்ளியில் எனது இரு குழந்தைகளை சேர்த்ததில் மனம் மகிழ்வோடு உள்ளேன் என்றார்.

ஏற்கனவே இவ்வொன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் என்பவர் தனது மகனை புதுக்கோட்டை நகர் மன்ற நடுநிலைப்பள்ளியிலும்,வட்டார வளமைய கணக்காளர் பழனிவேல் தனது இரு குழந்தைகளை அன்னவாசல் தொடக்கப்பள்ளியிலும் மரிங்கிப்பட்டி இடை
நிலை ஆசிரியர் திருப்பதி தனது இருமகன்களை புல்வயல் அரசு தொடக்கப்பள்ளியிலும் ,நார்த்தாமலை அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துக்கருப்பையா தனது மகனை அன்னவாசல் தொடக்கப்பள்ளியிலும் சேர்த்துள்ளனர்.

நிலையபட்டி தலைமையாசிரியர் இரவிச்சந்திரன்,மெய்வழிச்சாலை இடைநிலை ஆசிரியை சாலைகலாவல்லி,மேட்டுப்பட்டி பட்டதாரி ஆசிரியர் ஜாஸ்மின்,மருதாந்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆன்ட்ரூ நெல்சன்,பி.மேட்டுப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தனது குழந்தைகளை  தாங்கள் பணிபரியும் அரசுப் பள்ளிகளிலே சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Telegram& Whats App Group Link -Click Here