9 முதல் 11 வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து செய்ய இயலாது – உயர்நீதி மன்றம் 


தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தனி தேர்வு நடத்திக் கொள்ள பள்ளிகளுக்கு தனிப்பட்ட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பிளஸ் 1 வகுப்பில் சேரும் போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை சேர்க்கை வழங்க முடியும். மேலும், தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர். எனவே எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என தெரிவித்து, அரசாணையை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.

அதேநேரம், 10-ஆம் வகுப்பில் இருந்து 11-ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.