கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு இனி நுழைவுத் தேர்வு - மத்திய அரசு

நாடு முழுவதும் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  இந்த நீட் தேர்வு ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரையில், எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் எனவும் புதிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் ஆண்டுகளில்  திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும். திறனறிதல் தேர்வின் அடிப்படையில் உயர்கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போது கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும்  நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மாணவர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள் என ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்