12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு, 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்தும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரும் 10-ம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மே 5 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிபிஎஸ்இ ரத்து செய்தது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வையும் தள்ளி வைத்தது.

இதற்கிடையே தமிழகத்திலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெற்று முடிந்தன. 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வுகள் இல்லாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்தும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை மதிப்பிடும் முறை குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 10-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளத்தில் இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.