ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. வீட்டுக்கல்வி என்ற முறையில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்றும், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, ஒன்றரை மணி நேரமும், 9 முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சம் மூன்று மணி நேரமும் இணையவழி வகுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் ஆறு வகுப்புகளை மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கல்வித் தொலைக்காட்சி மூலம் ஜே.இ.இ., நீட் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Join Telegram& Whats App Group Link -Click Here