நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தமிழகத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

இதுபோன்ற வாக்குப்பதிவு இயந்திரம் கடந்த தேர்தலில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது.

தற்போது, சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதால், இந்த புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தும் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று 32 மாவட்டங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் டெல்லி சென்று பயிற்சி எடுத்து வந்துள்ளனர்.

அவர்கள், தமிழகம் வந்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இதையடுத்து பொதுமக்களும் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் வருகிற 9ம் தேதி (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் புதிய இயந்திரம் கொண்டு வந்து மக்களின் பார்வைக்காக வைக்கப்படும். அப்போது, பொதுமக்கள் இயந்திரத்தில் மாதிரி வாக்கு அளிக்கலாம்.

அவர்கள் எந்த வேட்பாளர், எந்த சின்னத்துக்கு வாக்களித்தார்கள் என்பதை மின்னணு இயந்திரத்தில் பார்த்து உறுதி செய்துகொள்ள முடியும்.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. பார்வையற்றவர்களும் பிரெய்லி முறையில் எளிதாக இந்த மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்கலாம்’’ என்றார்