நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, கரூரில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு  தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியையும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிய கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மொத்தம் உள்ள 3,350 இடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களுக்கும், தேர்வுக் குழுவினருக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை ஒற்றைச் சாளர முறையே பின்பற்றுப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை மாற்றி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது. அதன் தொடக்கமாக இணையதளங்களின் வாயிலாகவே முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வினை ஆன்லைன் முறையில் நடத்தவே முயற்சி செய்தோம். ஆனால், சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.
அதேவேளையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைன் வாயிலாக நடத்த தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பொறியியல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உறுதுணையுடன் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எனவே, நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்றார் அவர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here