புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.

ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , தேர்வு எழுதும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு எழுதும் நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 500 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் 3 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கேள்விகளை நன்கு புரிந்து மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Join Telegram Group Link -Click Here