தமிழை எளிமையாக கற்க இடைநிலை ஆசிரியை முனைவர் மு.கனகலட்சுமியின் 5 நூல்களை வெளியிட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k.பழனிச்சாமி.

சென்னை.அக்.28: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியை முனைவர் மு.கனகலட்சுமி அவர்கள் எழுதிய தமிழ்வேர் மழலையர் பள்ளி நிலை-1, தமிழ் முதல் எழுத்துக்கள் மழலையர் பள்ளி நிலை -2, தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் மாணவர் கையேடு,தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர்,பெற்றோர் கையேடு மற்றும் தமிழ் கையெழுத்துப் பயிற்சி கையேடு ஆகிய ஐந்து நூல்களை வெளியிட்டார்கள்.

இந்நூல்களின் ஆசிரியரான முனைவர் மு.கனகலட்சுமி அவர்கள் தொல்காப்பியம்,நன்னூல் ஆகியவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை எளிமையாக முறையாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் எனும் தலைப்பில் ஒலி,வரி வடிவங்களின் பெயர்களை அறிவது தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இவர் 24 ஆண்டுகளாக ஆசிரியர் பணியை மேற்கொண்டு ஆசிரியர் பயிற்றுநர்,தலைமைஆசிரியர் ஆகிய  பதவிகளை வகித்ததோடு ஆசிரியர்களுக்கு கருத்தாளராகவும் செய்பட்டுள்ளார்.

முனைவர் மு.கனகலட்சுமி அவர்கள் எழுதிய தமிழ்வேர் மழலையர் பள்ளி நிலை-1 மற்றும் தமிழ் முதல் எழுத்துக்கள் மழலையர் பள்ளி நிலை-2 ஆகிய நூல்கள் அடிப்படை கற்றல் திறன்களை முறையாக வளர்ப்பதற்காக எழுதப்பட்ட நூல்களாகும்.தமிழ்
படிக்க,எழுத 45 நாட்கள் மாணவர் கையேடு மற்றும் தமிழ்படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு ஆகிய நூல்கள் ஒலி,வரிவடிவப் பெயர்கள் முதல் எழுத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியரின் விதியின் எழுத்து ,சொல்,பொருள் என்னும் அடிப்படைக் கூற்றின் படி ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டவையாகும்.தமிழ் கையெழுத்து பயிற்சிகல  கையேடு தாய்மொழியை அழகாக முறையாக எழுதுவதற்கு 5 கோடுகள் போட்ட ஏட்டில் ஒவ்வொரு எழுத்தையும் எந்த இடத்தில் எந்த அளவு கழிக்க,மடக்க ,முடிக்க வேண்டும் எனத் தெளிவாக எழுத்துகளை எழுதிப் பழகுவதற்காக எழுதப்பட்ட நூலாகும்.

இந்த நிகழ்ச்சியில்  மாண்புமிகு பள்ளிக் கல்வி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திருமதி.பா.வளர்மதி,தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம்,பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு.தீரஜ்குமார்இ.ஆ.ப,பள்ளிக் கல்வி ஆணையர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப,பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன்,மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி ந.லதா ,நூல்களின் ஆசிரியர் முனைவர் மு.கனகலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Join Telegram& Whats App Group Link -Click Here